திருவள்ளூர் பகுதியில் ஒரே நாளில் அஞ்சலக பணியாளர் உள்பட 4 இளம்பெண்கள் மாயமான சம்பவம் தொடர்பாகப் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மப்பேடு காவல் நிலைய போலீஸார் தரப்பில் புதன்கிழமை கூறியதாவது..
திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த பாகசாலை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள்(20). இவர் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது, பேரம்பாக்கம் அஞ்சல் அலுவலகத்திற்கு உள்பட்ட கொண்டஞ்சேரி அஞ்சலகத்தில் அஞ்சல் பணியாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நாள்தோறும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று, மாலையில் வீடு திரும்புவாராம். எனவே கடந்த 23ஆம் தேதி வழக்கம் போல் அலுவலகம் சென்ற நிலையில் மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். உடனே இது குறித்து மப்பேடு காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன் பேரில் வேலைக்குச் சென்ற இளம்பெண் வீட்டிற்குச் செல்லாமல் எங்குச் சென்றார் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல், வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமியின் மகள் (19). அதேபோல் வெங்கத்தூர் வினோத் மனைவி செவ்வந்தி(19). இவர்கள் செவ்வாய்க்கிழமை அத்தியாவசிய பொருள்கள் வாங்கி வருவதாகக் கூறி மாலையில் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அதேபோல், திருவள்ளூர் அருகே திருமழிசையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வரும் முருகனின் மகள்(14) கடைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இளம் பெண்கள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.