தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் இரவு 7 மணிக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
"சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து கரோனாவை விரட்ட உறுதியேற்போம். தமிழக முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராகப் பேசுகிறேன். 21 நாட்கள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்களது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தைப் பாதுகாப்போம்.
பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கடும் சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். சர்க்கரை, உயர் அழுத்தம் இருப்போர் தவறாமல் மருந்துகளை எடுக்க வேண்டும். கரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாப்போம். விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு" என்றார்.