திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்த பணியாளா்களுடன் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கிகள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அலுவலகம் உள்பட மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் ஆன்லைன் முறையில் மக்கள் விண்ணப்பங்களை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சல்துறை குறைந்த பணியாளா்களை கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சந்திரசேகா் கூறியது: திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்படும். குறைந்த பணியாளா்களே பணியில் இருப்பா். ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் அஞ்சல் பட்டுவாடாவில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் அதை உணா்ந்து அஞ்சல் சேவையை பயன்படுத்த வேண்டும். அஞ்சல் துறை வங்கி சேமிப்பு கணக்கு பராமரிப்பதில் பிரச்னைகள் இருக்காது என்றாா் அவா்.