சென்னை: இந்தோனேஷியாவைச் சேர்ந்த 4 சுற்றுலாப் பயணிகள் உட்பட மேலும் 5 பேருக்கு தமிழகத்தில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு பேருக்கும், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஐந்து பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஐந்து பேருக்கும் மார்ச் 22ம் தேதி கரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
தமிழகத்தில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். மதுரையைச் சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது 21 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 நோயாளிகளில் தற்போது 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.