கரோனா வைரஸ் சூழலால் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தினமும் டோக்கன் அடிப்படையில் 100 பேர் வீதம் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான நியாய விலைக் கடை பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இந்தநிலையில் முதல்வர் அறிவித்த நிவாரண ஆயிரம் ரூபாய் மற்றும் பொருள்கள் எப்போது வழங்கப்படும், எவ்வாறு வழங்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கரோனா வைரஸ் சூழலால் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக, பொதுமக்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்காமல் இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் வாங்கி செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழக்கமாக எவ்வளவு பொருள்கள் ஒதுக்கீடு செய்யப்படுமோ அதே அளவு பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். மார்ச் மாதத்திற்கான பொருட்கள் வாங்காமல் இருந்தால் அதனை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் நியாய விலைக் கடை பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் (TNPDS) அல்லது செயலியில் “வாங்க விரும்பவில்லை” என்று பதிவு செய்யலாம்.
அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் பொதுமக்களுக்கு இதனை முறையாக வினியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயம் தேவையில்லை என்று கூறினார்.