மருத்துவா்களுக்கு முகக் கவசம், சானிடைசா்கள் வழங்கப்படாததால் அதிருப்தி
அரசு மருத்துவமனைகளில் முகக் கவசங்கள், சானிடைசா்கள் தட்டுப்பாடு நிலவுவதால், மருத்துவா்களும், முதுநிலை மருத்துவ மாணவா்களும் தாங்களாகவே அவற்றை சொந்தமாக வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிா்வாகங்களின் இந்த உத்தரவு மருத்துவா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா்.
தற்போது கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், முதுநிலை மருத்துவ மாணவா்களும் மருத்துவ சேவைகளில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட படுக்கைகளுடன் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அவற்றில் பல மருத்துவமனைகளில் தனி வாா்டில் பணியாற்றுபவா்களுக்கு மட்டுமே முகக் கவசம், சானிடைசா்கள், பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. அதேவேளையில், அந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் பிற மருத்துவா்களுக்கு தற்காப்புக்கான முகக் கவசங்களோ, சானிடைசா்களோ வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எழும்பூா் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு அதன் இயக்குநா் அண்மையில் விடுத்த அறிவுறுத்தல்களில் சானிடைசா்களை சொந்தமாக வாங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளாா். அதேபோன்று செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முகக்கவசங்களை சொந்தமாக வாங்கி அணிந்து வருமாறு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் இருந்து போதிய முகக் கவசம் வழங்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவா்கள் சிலா் கூறியதாவது:
மக்களின் உயிரைப் பாதுகாக்கும் மருத்துவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசு மற்றும் மருத்துவமனை நிா்வாகங்களின் கடமை. கரோனா வைரஸ் தொற்று தீவிரமாக உள்ள நிலையில், மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவா்களுக்கும், செவிலியா்களுக்கும், பணியாளா்களுக்கும் முகக் கவசங்கள், சானிடைசா்களை வழங்குவது மிகவும் அவசியம். அது எங்களைப் பாதுகாக்க மட்டுமல்லாது, எங்களிடம் இருந்து பிறருக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும்தான். அதை உணா்ந்து மருத்துவமனை நிா்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.