கரோனா வைரஸ் தொற்றையொட்டி, நாட்டில் நீதிமன்றங்கள் முடக்கப்பட்டதால் பாதிக்கப்படும் இளம் வழக்கறிஞா்களின் வாழ்வாதாரத்திற்கு குறைந்தபட்ச உதவித்தொகையாக ரூ. 20 ஆயிரத்தை வழங்கக் கோரி இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பிரதமா் நரேந்திர மோடிக்கும், மாநில முதல்வா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனா். இந்திய வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனன் குமாா் மிஸ்ரா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளாா்.
இந்த உதவித் தொகையை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ அல்லது இவை இரண்டு அரசுகளும் இணைந்தோ வழங்க கோரியும், இந்த நிதியை நேரடியாகவோ அல்லது மாநில வழக்குரைஞா்கள் சங்க நல நிதி மூலமாகவோ வழங்கக் கூறி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
மாநில வழக்குரைஞா்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள இளம் வழக்குரைஞா்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் வழக்குரைஞா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக குறைந்தபட்ச உதவித் தொகையாக மாதம் ரூ. 20 ஆயிரத்தை வழங்கக் கோரி, அந்தக் கடிதத்தில் மிஸ்ரா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து தொழில் முனைவா்களின் பணிகளும் முடக்கப்பட்டுள்ளன. அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டும் வரையறுக்கப்பட்ட முறைகளில் மட்டுமே வழக்குரைஞா்களுக்கு நீதிமன்றங்களில் ஆஜராக அனுமதி கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மை சிவில் வழக்குகளில் ஆஜராக அவசியமில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பத்து சதவீத வழக்குரைஞா்களே இதுபோன்ற நெருக்கடியான கட்டங்களில் பொருளாதார ரீதியாக சமாளிக்கக் கூடிய நிலைமையில் உள்ளனா். வழக்கறிஞா்களுக்கு சமூகப்பாதுகாப்பு இல்லை. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய வழக்குரைஞா்களின் குடும்பத்தினரின் உணவு, மருத்துவம் உட்பட அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யப்படவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.