திருமலைக்குச் செல்ல தேவஸ்தானம் உள்ளுர்வாசிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் அனுமதி மறுத்துள்ளது.
கரோனா தொற்று பரவுவதால், திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதனால் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் பக்தர்களுக்கு அனுமதி மறுத்தது.
இந்நிலையில் தற்போது கரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், தேவஸ்தானம் திருமலைக்குச் செல்ல புதன்கிழமை முதல் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுத்துள்ளது.
ஒருவார காலத்திற்கு மலைப்பாதைகளை முற்றிலும் மூட உத்தரவிட்டுள்ளது. தற்போது திருமலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் திருமலையில் தங்கியிருந்து தொடர்ந்து பணிபுரிவர்.
ஒரு வாரத்திற்குப் பின் மலைப்பாதைகள் திறக்கப்பட்டு ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் செல்ல அனுமதிக்கப்படுவர். ஊழியர்கள் ஒரு வாரம் சுழற்சி முறையில் பணிபுரிய தேவஸ்தானம் உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.