சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில், கரொனா வைரஸ் பரவலை உணராமல், ஏரியில் குதித்து குளித்து, விளையாடி பொழுதுபோக்கிய 50 பேரை வாழப்பாடி போலீசார் விரட்டியடித்தனர்.
உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கரொனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசும், மத்திய அரசும் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில், கரொனா வைரஸ் பரவலை உணராமலும், ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமலும், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் புதன்கிழமை ஏரியில் குதித்து குளித்து, விளையாடி பொழுதுபோக்கினர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வாழப்பாடி போலீசார் மற்றும் சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஏரியில் குதித்து விளையாடிய 50 பேரையும் எச்சரித்து வீடுகளுக்கு விரட்டியடித்தனர்.
தமிழக அரசு பொதுமக்கள் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டுமென எச்சரித்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல், ஊரடங்கை விடுமுறையாகக் கருதி, உல்லாசமாக கழிக்கும் எண்ணத்தில் ஏரிகளில் சென்று கும்பலாக குளித்து பொழுதுபோக்கியது பல்வேறு தரப்பினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுபானத்தோடு அசைவ விருந்து: அதே பகுதியில் மதுபான விருந்துக்காக அசைவ உணவு சமையல் செய்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த 8 பேரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
பொதுமக்கள் வீடுகளில் தனித்து இருக்காமல் வெளியே வந்தாள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.