ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 219 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி புதன்கிழமை மாலை தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 219 பேர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு யாரெல்லாம் வெளிநாடுகளில் இருந்து வந்தார்கள் என விமான நிலையத்தில் இருந்து பட்டியல் பெற்று கண்டறியப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 2 பபரிசோதனையில் 26 வயது உடைய ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனிமை சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தொடர்ந்து அவரை மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.அவர் விமான நிலையத்தில் இருந்து இறங்கியது முதல் இதுவரை 68 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதில் 49 பேர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்தவர்கள், 17 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் 2பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
மேற்கண்ட 68 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 49 பேர் 10 தெருக்களில் உள்ளனர்.அந்த தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் இருக்கிறது.மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.