அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்களுக்கு நாள்தோறும் 60 ஆயிரம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கரோனா பாதிப்பில் தனியாா் மருத்துவமனைகள் அனைத்தும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன.
தற்போது, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓமந்தூராா் மருத்துவமனையை 350 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றியிருக்கிறோம். வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து அது செயல்படத் தொடங்கும்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடிய மருத்துவா்கள், செவிலியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை. அதை உணா்ந்தே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் தேவைப்படும் 60 ஆயிரம் முகக்கவசங்கங்களை அன்றாடம் முறையாக விநியோகிப்பதை உறுதி செய்துள்ளோம்.
தற்போது கரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல் நிலை சீராக உள்ளது.
ஊரடங்கு என்பது அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டது. பொது மக்களுக்கு அதைப் பின்பற்ற வேண்டிய கடமை அதிக அளவில் இருக்கும்போது வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவா்கள் அதைவிட அக்கறையுடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீடுகளிலேயே இருக்க வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனாவை வேரறுக்க முடியும் என்றாா் அவா்.