பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியது: உமா் அப்துல்லாவை விடுவித்து மெகபூபா முப்தி உள்ளிட்ட பிற காஷ்மீா் தலைவா்களை விடுவிப்பதில்லை என்ற முடிவானது மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒருங்கே தரும் முடிவாகும். கரோனா நோய்த் தொற்றை தடுக்க நாம் ஆயத்தமாகுதல் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்கி வரும் நிலையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது கைது செய்யப்பட்டவா்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.