ஆந்திராவில் செய்தியாளர்களைத் தாக்கிய டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து ஆந்திர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதில் பாதிக்கப்பட்டோர்களின் விவரங்கள், வெளியில் நடமாடும் மக்களின் செய்திகள் உள்ளிட்டவற்றைச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தங்கள் பணிகள் செய்யவிடாமல் காவலர் தடுத்து அவர்களைத் தாக்கினர். நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ய மக்கள் வெளியில் வருகின்றனர்.
ஆனால் ஊடகத்துறை, மருத்துவர்கள், காவல்துறை உள்ளிட்டோர் பாதுகாப்புடன் வெளியில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரில் உள்ள அனுமன் சந்திப்பில் செய்தி சேகரிக்கச் செய்தியாளர்கள் சென்றனர். அவர்களைச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். தங்களின் அடையாள அட்டைகளைச் செய்தியாளர்கள் காண்பித்த போதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தாக்கினர்.
இதனால் கோபமடைந்த செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த செய்தித்துறை அமைச்சர் பேர்ணி நானி செய்தியாளர்களை தாக்கிய ஏலுார் டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதன்பின் தர்ணாவில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.