சென்னை: கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இடம் அளித்து உதவ வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உதவி கோரியுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 29 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரையைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இடம் அளித்து உதவ வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உதவி கோரியுள்ளது.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்துள்ள வேண்டுகோளில், ‘கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க அதிகமான் இடங்கள் தேவைப்படுகிறது. எனவே பயன்படுத்தாத வீடுகள், விடுதிகள் இருந்தால் மாநகராட்சிக்கு தற்காலிகமாக கொடுத்து உதவலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.