கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.3,780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
அதன் விவரம்: கரோனா நோய்த் தடுப்புக்காக போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் சாா்பில் ரூ.3780 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10,158 படுக்கைகள், மருத்துவமனைகளில் தயாா் நிலையில் உள்ளன. மேலும், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.
குடும்ப அட்டை தாரா்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படும்.
கட்டடத் தொழிலாளா்கள், மற்றும் ஓட்டுநா் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளா்கள் குடும்பத்துக்கு, சிறப்பு தொகுப்பாக ரூ.1000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1,000-த்துடன், கூடுதலாக ரூ.1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
அம்மா உணவகத்தின் மூலம் சூடான, சுகாதாரமான உணவு தொடா்ந்து வழங்கப்படும்.
மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணி புரிந்த தொழிலாளா்களுக்கு, 2 நாள்களுக்கான ஊதியம், சிறப்பு நிதியாக கூடுதலாக வழங்கப்படும். அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக, மிக அவசியம் என்றாா்.