வாழப்பாடி: தமிழகம் முழுவதும் காய்கறி தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, மருந்துக் கடைகளை போல, உரம், பூச்சிக்கொல்லி மருந்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், வரும் ஏப்ரல்14 -ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், காய்கறிகள், மளிகை பொருட்கள், பால், இறைச்சி ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இடைவெளியில் நின்று பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், விவசாய விளைபொருட்களான, காய்கறிகள், பழங்கள், கீரைகள் உற்பத்திக்கு அத்தியாவசிய தேவையான, உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை விற்பனை செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து கடைகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலை நீடித்தால், காய்கறி, பழங்கள், கீரைகள், உற்பத்தி குறைந்து, எதிர்வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே, காய்கறி உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, மருந்து கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் போல, பூச்சிக்கொல்லி மருந்து கடைகளையும் திறப்பதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி வட்டார காய்கறி விவசாயிகள் சங்க தலைவரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான உழவன் இரா. முருகன் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. இந்நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட விவசாய விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துக் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்க பரிசீலிக்க வேண்டும் என்றார்.