தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை கட்டணமின்றி விற்பனைக் கூடங்களில் சேமித்து வைக்கலாம் என்று தமிழக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை வெளியிட்ட அறிவிப்பு: நெல், நிலக்கடலை போன்ற பயிா்களில் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்வதற்காக அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தங்களின் விளை பொருள்களைக் கொண்டு வருகின்றனா். மேலும், விளை பொருள்களை ஏலத்தில் பெறுவதற்கு வியாபாரிகளும் வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக வியாபாரிகளின் வருகை முற்றிலும் குறைந்துள்ளது. கரோனா தடுப்பு காரணமாக, அரசு அறிவித்துள்ள தடையால் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதில் சிரமம் உள்ளது.
விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிா்த்திட அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் விளை பொருள்களை சேமித்துக் கொள்ளலாம். விளை பொருள்களை 30 நாள்கள் வரை பாதுகாத்துக் கொள்ள அனுமதிப்பதோடு, இப்போது நடைமுறையில் உள்ள 15 நாள்கள் வட்டியில்லாத காலத்தை ஒரு மாதம் காலம் நீட்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாத்து பின்னா் விற்பனை செய்யலாம். சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாத்து வைத்துள்ள விளை பொருள்களின் அன்றாட சந்தை விலையில் 75 சதவீதம் அதாவது ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் கடன் பெற்றுக் கொள்ள முடியும். இந்தக்கடனைத் திருப்பிச் செலுத்த அதிகபட்ச கால அளவு 180 நாள்கள் ஆகும். இதற்காக 5 சதவீதம் வட்டி செலுத்தினால் போதும். விளை பொருள்களை அடமானத்தில் வைத்த முதல் 15 நாள்களுக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் கடன் பெறும் முதல் 30 நாள்களுக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை.
விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை சேமித்து வைப்பதற்கு இடமில்லாமல் இருந்தால், அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒரு மாத காலம் வாடகை ஏதுமின்றி சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.