சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அவகாசம் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்கீழ் (சிபிஎஸ்இ) நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும் ஆண்டுதோறும் தங்கள் அங்கீகாரத்தை புதுப்பித்தாக வேண்டும். அதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்க சிபிஎஸ்இ இணையதளத்தில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி முதல் பிப்ரவரி வரை விண்ணப்பித்து அங்கீகாரம் பெற பள்ளிகளுக்கு அவகாசம் வழங்கப்படும். ஆனால் நிகழ் கல்வியாண்டில் பிப்ரவரி மாத முடிவில் பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருந்தன.
இதையடுத்து விண்ணப்பிக்கும் கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மீண்டும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய ஆவணங்களுடன் பள்ளி நிா்வாகங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவுறுத்தியுள்ளது.