திருப்பூரில் 41,273 வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 41,273 வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் 41,273 வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்


திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 41,273 வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக்தில் கரோனா நோய்த் தடுப்பு குறித்து பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். 

அப்போது அமைச்சர் பேசியதாவது:

"தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து மாவட்ட எல்லைகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் மற்றும் சுகாதாரத்தை காக்கும் வகையில் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நோய்தடுப்பு நடவடிக்கையாக தேவையான அளவு முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளது. நமது மாவட்டத்திலிருந்து முகக் கவசங்கள் மாநிலத்திலுள்ள பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பகுதி தயார் நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் கிசிச்சைக்காக தனி வார்டுடன் கூடிய மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதிலும் சுமார் 86 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற ஒடிஸா, பிகார், மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த 41,273 தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகையும் மற்றும் நியாய விலை பொருள்களும் 7,25,973 குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக சேருவதை தவிர்க்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுது பொருள்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்படும் விவரம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். 

இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளதால் பொது மக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடித்து தேவையில்லாமல் வெளியே செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். அத்தியவசிய தேவைகளை தவிர தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினரால்; வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

முன்னதாக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி குழுமம் சார்பில் ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையினை அந்நிறுவனத்தின் தலைவர் மு.வேலுசாமி, மு.அமர்நாத் ஆகியோர் அமைச்சரிடம் வழங்கினர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கயம்), மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாநகர காவல் துணை ஆணையர்கள் பத்ரிநாராயணன், பிரபாகரன் , மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் எம்.சாகுல் ஹமீது (பொது), பாலசுப்பிரமணியன் (ஊராட்சிகள்) திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி, பொது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com