கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காலத்தில் பாளையங்கோட்டையில் குறைந்த உறவினர்களுக்கு மத்தியில் முகக்கவசம் அணிந்து திருமணம் செய்து கொண்ட மணமக்களை பொதுமக்கள் பலர் வாழ்த்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகள் முத்துச்செல்விக்கும், மும்பையைச் சேர்ந்த ஏ.கண்ணன் மகன் கே.செந்திலுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு பூர்வீக ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி உறவினர்கள் 1000-க்கும் மேற்பட்டோருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். ஆனால், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 20 அழைப்பிதழ்கள் மட்டுமே அடித்து எளிமையாக திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்தபடி மணமேடைக்கு வந்தனர். பின்னர் கூடியிருந்த மிகவும் குறைந்த உறவினர்கள் மத்தியில் தாலிக்கட்டப்பட்டது. எளிமையாக திருமணத்தை நடத்திய தம்பதிக்கு பாளையங்கோட்டை பகுதி பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.