ஊரடங்கு உத்தரவை மீறிய புதுச்சேரி மாநில பாஜக தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
புதுச்சேரி ஊரடங்கு உத்தரவை மீறி அரிசி பாக்கெட் விநியோகம் செய்து கூட்டம் கூட்டிய புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்த உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
உத்தரவை மீறுவோர் மீது அந்தந்த மாநில காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசித்து வரும் புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன், லாஸ்பேட்டை நெசவாளர் நகரில் 10 கிலோ எடைகொண்ட அரிசி பாக்கேட் விநியோகம் செய்துள்ளார். இதனால் அங்கு கூட்டம் கூடியுள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும், மக்கள் கூட்டத்தை கூட்டியதால் புதுச்சேரி மாநிலத் தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன், லாஸ்பேட்டை புதுப்பேட் பகுதியைச் சேர்ந்த சோமு, நெசவாளர் நகர் முத்து ஆகிய மூவர் மீதும் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.