சென்னை கலைஞர் அரங்கை கரோனோ சிகிச்சைக்கான தனிமைப்படுத்துல் முகாமுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் திமுக சார்பில் அனுமதி கடிதம் அளிக்கபட்டுள்ளது. இதற்கான கடிதத்தை மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையரை ஜி.பிரகாஷ் நேரில் சந்தித்து அளித்தனர்.
இதுதொடர்பாக, திமுக அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் தேவையான நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய - மாநில அரசுகளுக்கு திமுக, தன்னாலியன்ற ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் உதவிகளையும், அறம் சார்ந்த முக்கியக் கடமையாக எண்ணிச் செய்து வருவதை அனைவரும் அறிவர்.
அதன் தொடர்ச்சியாக, திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலய வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை, கரோனா நோயால் பாதிக்கப்படுவோர், தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அரசு சார்பில் கலைஞர் அரங்கத்தைஐ பயன்படுத்திட, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வரும் அதிகாரிகளுக்கு, திமுகவின் சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.