புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்சி மலை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று (30 முதல் 40 கி.மீ வரை) மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 12 செ.மீ., திருவில்லிபுத்தூர் 9 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.