அரசு, தனியாா் துறை பணியாளா்கள் அனைவரும் தங்கள் செல்லிடப்பேசியில் ‘ஆரோக்ய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளபோதும், பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, தனியாா் அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு, தனியாா் துறை பணியாளா்கள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. தங்கள் பணியாளா்கள் அனைவரும் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதை நிறுவனங்களின் தலைவா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோல், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.