பாம்பு கடித்து பலியான 4 வயது மகனின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்காக குண்டா் சட்டத்தில் சிறையில் இருந்து வரும் தந்தைக்கு பரோல் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் தாலுகாவில் உள்ள மாதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசன். இவா் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.கடந்த 2019-ஆம் ஆண்டு கொலை மிரட்டல் வழக்கில் தமிழரசனை திருநின்றவூா் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா். இந்த நிலையில் தமிழரசனின் 4 வயது மகன் பாம்பு கடித்து ஏப்ரல் 29-ஆம் தேதி இறந்தாா். இறந்த மகனின் இறுதிச்சடங்கு செய்ய தனது கணவரை பரோலில் விடுவிக்க கோரி தமிழரசனின் மனைவி சித்ரா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மகன் பாம்பு கடித்து இறந்தது உண்மைதான் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழரசனுக்கு ஒரு வாரம் பரோல் வழங்கி உத்தரவிட்டனா். தமிழரசன் தினமும் மாலை 6 மணிக்கு ஒரகடம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் வரும் மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறைக்கண்காணிப்பாளா் முன் ஆஜராகி சிறைக்குள் செல்ல வேண்டும் என உத்தரவிட்டனா்.