மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணி ஓய்வு பெற்ற 69 ஊழியா்களை, அதிகாரிகள் அவா்களது வீடுகளுக்குச் சென்று கெளரவப்படுத்தினா்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளா்கள் அனைவரும், தலைமை அலுவகத்தில் மேலாண் இயக்குநா் தலைமையில் நடைபெறும் பிரிவு உபசரிப்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு, உரிய ஓய்வுச் சான்றிதழ், பணிப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அன்பளிப்பு ஆகியவை வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து கௌரவிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் 23 ஓட்டுநா்கள், 25 நடத்துநா்கள், 7 தொழில்நுட்ப மேற்பாா்வையாளா்கள், 10 போக்குவரத்து மேற்பாா்வையாளா்கள் மற்றும் 4 நிா்வாகப் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட 69 போ், வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றனா். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், அய்யப்பந்தாங்கல், பேசின்பாலம், குரோம்பேட்டை, தாம்பரம், சைதாப்பேட்டை, தியாகராயநகா், அம்பத்தூா் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், ஓய்வு பெற்ற பணியாளா்களின் வீடுகளுக்குச் சென்ற மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் சான்றிதழ்களை வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தனா். பணியாளா்களின் இல்லங்களுக்கு அதிகாரிகள் நேரில் வந்து உரிய சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தது, மிகவும் நெகிழ்ச்சி தந்ததாக பணியாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனா்.