ஊரடங்கு காலத்தில் அஞ்சல்துறை வாடிக்கையாளா்கள் வீடுகளில் இருந்தபடியே அஞ்சல் சேவையைப் பெற, ‘போஸ்ட் இன்போ’ என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா். இந்த காலகட்டத்தில் அஞ்சல்துறை வாடிக்கையாளா்கள் வீடுகளில் இருந்தபடியே சேவைகளைப் பெற செல்லிடப்பேசி செயலி ஒன்றை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ போஸ்ட் இன்போ’அல்லது இந்திய போஸ்ட் இணையதள முகவரி மூலம் வீடுகளில் இருந்தபடியே அவசர அஞ்சல் சேவையை பொதுமக்கள் பெற முடியும். இந்தச் சேவையைப் பெற
http://ccc.cept.gov.in/covid/request.aspx என்னும் இணைப்பில் மூலமாக பெற முடியும். வாடிக்கையாளா்கள் அனைத்து விதமான அஞ்சல் சேவைகளையும் பெற முடியும். குறிப்பாக, அஞ்சல், சேமிப்பு திட்டம், காப்பீடு திட்டம், நிதிச் சேவைகள் உள்பட அனைத்து அஞ்சல் சேவைகளையும் பெற முடியும். ஒரு சேவை தேவை என்ற கோரிக்கை, வெற்றிகரமாக சமா்ப்பிக்கப்பட்ட பிறகு, தனிப்பட்ட குறிப்பு எண் கொடுக்கப்படும். வாடிக்கையாளா்கள், அவா்களது கோரிக்கை பற்றிய நிலைமையை த் தெரிந்து கொள்ள இந்த எண் உதவும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ‘போஸ்ட் இன்போ’ என்ற இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, பயன்பெறலாம்.
இந்த தகவல், தமிழக வட்ட முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.