தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றிய மகாராஷ்டிர தொழிலாளர்கள் 113 பேர் நான்கு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது முடக்கத்துக்குப் பிறகு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அந்தந்த பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் தங்க வைத்து, தன்னார்வலர்கள் மூலம் உணவு உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
மாவட்டத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 4,369 பேர் இருக்கின்றனர்.
இவர்களில் 2,300 பேர் தங்களது ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
இதில், முதல் கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 115 பேர் மருதுபாண்டியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 4 பேருந்துகளில் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இவர்களது உடைமைகளைக் கொண்டு செல்ல மகாராஷ்டிரத்திலிருந்து 4 லாரிகள் வந்தன.
இவற்றில் அவர்களுடைய உடைமைகள் எடுத்து செல்லப்பட்டன.
இவர்களை கோட்டாட்சியர் எம். வேலுமணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுஞ்செழிய பாண்டியன், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் சுஜாதா பாரதிதாசன், செஞ்சிலுவைச் சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.