திருவாரூரில் பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ. 7500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கக்கோரி ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அன்றாடம் உழைத்து, ஊதியம் ஈட்டி அதன் மூலம் குடும்பம் நடத்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், மளிகை பொருட்களும் தடையின்றி விரைவாக வழங்க வேண்டும். பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தலா ரூ. 7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கட்டுமானம், ஆட்டோ, உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி, பொருள்களை வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் திரும்ப, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகளை கட்டணம் வசூலிக்காமல் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் தலைவர் ஆசாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியை பயன்படுத்தி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.