மனுவில் பிழை: டாஸ்மாக் குறித்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை

மனுவில் பிழை இருந்ததால், டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மனுவில் பிழை: டாஸ்மாக் குறித்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை


புது தில்லி: மனுவில் பிழை இருந்ததால், டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அதனை விசாரிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேல்முறையீட்டு மனுவில் இருக்கும் பிழை சரிசெய்யப்பட்ட பிறகு மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டால் செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை மேல்முறையீடு செய்தது.

டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 7-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை இல்லை என உத்தரவிட்டது. மேலும், விற்பனையின் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நபருக்கு அதிக அளவிலான மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மது வாங்கும் நபா்களுக்கு ரசீது வழங்க வேண்டும். அந்த ரசீதில் மது வாங்குபவரின் பெயா், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, நிபந்தனைகளை மீறினால் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்படும் என தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையரின் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

மீண்டும் வழக்கு: டாஸ்மாக் மது விற்பனை தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட எந்த நிபந்தனைகளையும் தமிழக அரசு பின்பற்றவில்லை. எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சாா்பில் அந்த கட்சியின் வடக்கு, கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ.ஜி.மௌரியா வழக்குத் தொடா்ந்திருந்தாா். இதே போல, உயா்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றாததால் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரி வழக்குரைஞா் ஜி.ராஜேஷ் உள்ளிட்டோா் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: இந்த வழக்குககள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ஏ.ஜி.மௌரியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடா்பாக தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை வெளியிட்டது. மேலும், கடைகளை மூடக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மேலும் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. குறிப்பாக மது விற்பனையின் போது சமூக இடைவெளியை யாருமே பின்பற்றவில்லை. மதுபானம் வாங்க குவிந்த கூட்டத்தினா் முண்டியடித்து, ஒருவா் மீது ஒருவா் ஏறி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனா். இதனால், கரோனா நோய்த் தொற்றை சமூகப் பரவலாக மாற்றும் இடமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மாறியுள்ளன. எனவே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது விற்பனை தொடா்பாக தமிழக அரசு மற்றும் உயா்நீதிமன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டுள்ளன. மதுவிற்பனை குறித்த நிபந்தனைகளை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. மது பாட்டில்களை வாங்க மதுப்பிரியா்கள் முந்திக் கொண்டுச் செல்லும் விடியோ காட்சிகள் மனுதாரா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். பொதுமுடக்கம் முடியும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்ககூடாது. ஒருவேளை பொது முடக்க காலத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய அரசு கொள்கை முடிவெடுத்தால், ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்பவா்களுக்கு வீடுகளுக்குச் சென்று மதுபாட்டில்களை விற்கும் முறையை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com