திருப்பூரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததையடுத்து, திருப்பூர் மாவட்டம் கரோனா தொற்று இல்லா மாவட்டமாகிறது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் திருப்பூரில் மொத்தம் 114 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்ததையடுத்து, அந்த மாவட்டம் கரோனா தொற்று இல்லா மாவட்டமாகிறது.
இதுபற்றி திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கத்தில்,
"கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட இடுவாயைச் சேர்ந்த இருவர் முற்றிலுமாக குணமடைந்துள்ளனர். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து அவர்கள் இன்று வீடு திரும்புகிறார்கள். இதன்மூலம், திருப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்துவிட்டனர். தற்போதைய நிலையில் திருப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர்கூட சிகிச்சையில் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே சிவகங்கை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர். சிவகங்கையில் 12 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து, 12 பேரும் குணமடைந்தனர். ஈரோட்டில் மொத்தம் 70 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 69 பேர் குணமடைந்துவிட்டனர், ஒருவர் பலியானார்.