பவானியில் யூடியூப் வீடியோவில் பார்த்து கள்ளச் சாராயம் காய்ச்சிய டிவி மெக்கானிக்கை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பவானி நகரின் மையப் பகுதியான காமாட்சி அம்மன் கோயில், தேவராஜன் சந்தில் வசிப்பவர் சுப்பிரமணி மகன் ரமேஷ் (49). டிவி மெக்கானிக். இவர் அதிக அளவில் அழுகிய பழங்கள் மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பவானி காவல்துறையினர் திங்கள்கிழமை இவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண் பானையில் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. மேலும், குக்கர் மூலம் அடுப்பில் கள்ளச் சாராயம் காய்ச்ச முயன்றதும் தெரிந்தது.
டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
வருமானம் குறைந்த நிலையில் மது வாங்கி குடிக்க போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே யூடியூப் வீடியோ பார்த்து, அதன்படி சாராயம் காய்ச்ச முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, சாராய ஊறலைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் ரமேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.