ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்ட மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் 2 மாதங்களுக்குப் பின்பு திங்கள்கிழமை முதல் மீண்டும் துவங்கியது.
மதுரை-போடி அகலரயில் பாதை திட்டப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான சுமார் 43 கிலோமீட்டர் தூரம் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது.
மேலும், உசிலம்பட்டியிலிருந்து போடி வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கில் சில பணிகளுக்கு அரசு தளர்வு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 2 மாதங்களுக்குப் பின்னர் போடி மதுரை அகல ரயில் பாதைக்கான பணிகள் தற்போது துவங்கி உள்ளது. கணவாய் மலைப்பகுதியிலிருந்து ஆண்டிபட்டி வரையில் ரயில் தண்டவாளம் அமைப்பதற்கான பாதை மண் போட்டுச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கணவாய் மலைப்பகுதியில் மலைகளை குடைந்து பாதை அமைக்கும் பணியையும் ஓரிரு நாளில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போடி மதுரை அகல ரயில் பாதை திட்டப்பணிகள் 2 மாதங்களுக்குப் பின்னர் தீவிரமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.