சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.54 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.
கரோனா தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 4,28,015 வழக்குகளைப் பதிவு செய்து 4,54,016 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 3,75,792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.4,91,79,379 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 23 இருசக்கர வாகனங்கள், 24 ஆட்டோக்கள் என மொத்தம் 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 98 இரு சக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள் என மொத்தம் 105 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.