தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) மட்டும் புதிதாக 716 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 427 பேர் ஆண்கள், 288 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர இன்று மட்டும் 83 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,134 ஆக உள்ளது.
இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 6,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 11,632 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,55,584 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக பாதிப்புக்குள்ளானோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 510 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.