சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 28 நாள்களுக்கு கடற்கரை - வேளச்சேரி இடையே ரயில் சேவை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இங்கு பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதியான நிலையில், உடன் பணியாற்றிய 40க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், தற்போது 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.