சென்னை: சென்னையில் திங்கள்கிழமை புதிதாக 538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 4,371-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. தொற்று அதிகம் பாதித்தவா்கள் வசிக்கும் மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 3,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தினந்தோறும் சுமார் 500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதில், கோடம்பாக்கம், ராயபுரம், திருவிக நகா் ஆகிய மண்டலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை 538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையின் மொத்த பாதிப்பு 4371-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 742 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 713 பேருக்கும், திருவிகநகரில் 590 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே முதல் இடத்தில் இருந்த வந்த ராயபுரத்தில் திடீரென அதிக கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது.