பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்தனர்.
தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மருத்துவத் தேர்வாணைய குழுவின் மூலம் 2015ஆம் ஆண்டு 11000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பணி புரிந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதியின் அடிப்படையில் பணிபுரிந்து வந்தனர். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் 1949 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர்.
ரூபாய் 7700 ஒப்பந்த ஊதியத்தில் பணியாற்றிவந்த செவிலியர்களுக்கு, நீதிமன்ற வழக்கு மற்றும் மாநிலம் தழுவிய போராட்டம் போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த ஊதியமாக ரூபாய் 15,000 வழங்கப்படுகிறது. ஆனால் ஒரே பணி செய்கின்ற நிரந்தர செவிலியர்கள் அனைத்துப் பலன்களுடன் ரூபாய் 50,000 மாதச் சம்பளம் பெற்று வருகின்றனர். எனவே அரசு அறிவித்தபடி அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உலக செவிலியர் தினமான செவ்வாய்க்கிழமை அனைத்து செவிலியர்களும் கருப்பு பட்டை அணிந்து அரசுக்கு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமைதி வழியில், அறவழியில் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்தனர்.
நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவத் தேர்வாணைய குழு செவிலியர் நலச்சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.திருவேணிஜெகதீசன் மற்றும் மாவட்ட தலைவர் எம்.வனஜா ஆகியோர் தலைமையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி பணியில் ஈடுபட்டனர்.