வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மே 13) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அரியலூா், கடலூா், விழுப்புரம், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மே 13) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அந்தமான் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபாா் பகுதியில் மே 16-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.