புது தில்லி: ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பனை செய்வது இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் தற்போதைக்கு ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய இயலாது. மேலும், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுவாங்க வருவோர் ஆதார் அட்டை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.