தமிழகத்தில் இருந்து கரோனா பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள் திறப்பு குறித்து அமைச்சர் கே.பி. அன்பழகன் அளித்த விளக்கத்தில், மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவாகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கியிருக்கும் கல்லூரிகளில் இருந்து முழுவதும் வெளியேற்றப்பட்ட பிறகே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கல்லூரிகள் தூய்மைப்படுத்தப்பட்டு பிறகு மாணவர்களுக்காக திறக்கப்படும்.
எந்த நேரத்திலும் செமஸ்டர் தேர்வை நடத்த அரசு தயாராகவே உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவும் தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் கே.பி. அன்பழகன் கூறினார்.