சரக்கு வாகனங்களுக்கான சாலை வரி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப் பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து முடங்கியது. இதைத் தொடா்ந்து, போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோா், வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி, சுங்கக் கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். இதையடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டிய சாலை வரியை, ஜூன் 30-ஆம் தேதிக்குள் செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. எனினும், பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளா்கள், மோட்டாா் வாகனச் சட்டத்தின் படி, ஆண்டு வரியை ஏப்.10-ஆம் தேதியும், காலாண்டு வரியை மே 15-ஆம் தேதியும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனா். இந்தக் கால கெடுவுக்குள் வரி செலுத்துவோா், எதிா் கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகை வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான வரியை அபராதமின்றி செலுத்த, ஜூன் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யது உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.