கும்மிடிப்பூண்டி: இணையதளம் வழியாக சர்வதேச அளவில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில், டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெங்களூரூவில், எஸ்.ஜி.எஸ் சர்வதேச யோகா பவுண்டேஷன் கல்லூரி மற்றும் ஆய்வு மையம் இயங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அந்த மையம் சார்பில், இம்மாத தொடக்கத்தில், இணையதளம் வழியாக சர்வதேச அளவிலான யோகாசன போட்டிகள், நடத்தப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சேர்ந்தவர்கள் போட்டியாளர்கள், ஓமன், இங்கிலாந்து, வியட்நாம், மலேசியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியாளர்கள், தங்களின் வீடுகளிலிருந்தபடியே யோகாசன புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்திருந்தனர். வயது வாரியாக ஆண்கள், பெண்கள் என ஒன்பது பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில், கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஆர்.ஜி.யுவன் முதல் இடம் பிடித்தார்.
அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி பி.திருசிவபூரணி மற்றும், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஏ.சாருஹாசினி ஆகியோர் அவரவர் வயது பிரிவில் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பள்ளியின் யோகா பயிற்றுனர் எஸ்.சந்தியா ஆகியோரை, டி.ஜெ.எஸ்., கல்வி குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன், முதல்வர் சுகதா தாஸ் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.