திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத் துறை அமைச்சர் இரா. காமராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
கூத்தாநல்லூர் செல்வி மஹாலில் நடைபெற்ற விழாவிற்கு, அமைச்சர் இரா.காமராஜ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் தெய்வநாயகி,நகராட்சி ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் டி.எம்.பஷீர் அகமது வரவேற்றார்.
விழாவில், மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் ( கிழக்கு ) தமிழ்க் கண்ணன், (மேற்கு ) தமிழ்ச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எல்.எம்.முகம்மது அஷ்ரப், மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவ.பக்கிரிசாமி, லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் உதயகுமார், எம்.ஜி.ஆர்.மன்ற நகரச் செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மன்னார்குடி கிழக்கு ஒன்றியம், கூத்தாநல்லூர் நகரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 588 ஏழை, எளியவர்களுக்கு, அமைச்சர் இரா.காமராஜ், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, தேவையில்லாத விமர்சனங்கள் வந்தது. அதற்கெல்லாம் பதில் சொல்லி காலத்தை விரையமாக்காமல், பதிலைச் செயல்கள் மூலம் செய்து வருபவர் முதல்வர். கரோனா தொற்று நோய் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில், தொற்றின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், வீரியம் குறைவுதான். கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் நோய்க்கு மருந்து, 20 நொடிகள் கைகளைக் கழுவ வேண்டும்.
முகக் கவசம் அணிய வேண்டும். விலகி நிற்க வேண்டும். இதுதான் மருத்துவம். இவைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் ஏழை, எளியவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அதிமுகதான். கரோனா தொற்றால் ஒருவரைக் கூட இழக்க விரும்பாதவர் முதல்வர் என அமைச்சர் தெரிவித்தார்.