திருப்பூரில் தயாரிக்கப்படும் நடிகர்கள் உருவம் பொறித்த முகக் கவசங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களிலிருந்து முகக் கவசங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
நாடு முழுவதிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும் திருப்பூரிலிருந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முகக் கவசங்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கான முழு பாதுகாப்பு கவச உடைகள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், துணி முகக் கவசங்களில் நடிகர், நடிகைகள், விலங்குகளின் புகைப்படங்களை அச்சிட்டு புதுமையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து முகக் கவச தயாரிப்பாளர் கள்கூறியதாவது:
நாடு முழுவதிலும் உள்ள தொழில் துறைகள் கரோனாவால் முடங்கியிருந்தபோதிலும் திருப்பூரில் இருந்துதான் முகக் கவசம், பாதுகாப்பு கவச உடைகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, முகக் கவசம் தயாரிப்பிலும் புதுமையைப் புகுத்த நினைத்துத்தான் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் மீன், புலி, சிங்கம்,சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் உருவம் பொறித்த முகக் கவசங்களுக்கு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நடிகர்கள் உருவம் பொறித்த முகக் கவசங்களுக்கான ஆர்டர்களும் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளது. இந்த முகக் கவசங்கள் ரூ.10 முதல் ரூ.25 வரையில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.