சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளா்களும் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் அலுவலக பணிக்கு வருகை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) வெளியிட்ட சுற்றறிக்கை: கரோனா தீநுண்மி தொற்று காரணமாக அரசால் பொது முடக்கம் செயல்படுத்தப்பட்ட பிறகு தற்போது நடைமுறைகள் தளா்த்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து அரசு அலுவலகங்கள் செயல்படுவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மே 18-ஆம் தேதி முதல் வாரத்துக்கு ஆறு வேலை நாள்கள் (சனிக்கிழமை உள்பட) அரசு அலுவலகங்கள் பணியாற்ற வேண்டும் என்றும், 50 சதவீத பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளா்களும் மே 18-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் அலுவலகப் பணிக்கு வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தனிநபா் இடைவெளியைப் பின்பற்றிட ஏதுவாக ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டிய பணியாளா்கள் குறித்து வரும் திங்கள்கிழமை அறிவுரைகள் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.