திருச்சி: திருச்சியில் ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் ஊடகவியலாளர் சனிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி காந்திசந்தை வடக்குதாராநல்லூர் கீரைக்கடை பஜார் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் மணிகண்டன்(36). இவர், மாத இதழ் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களாக காந்திசந்தை பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பொதுமக்கள் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதன் பேரில் குடிமைப் பொருள் அதிகாரிகள், உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கூட்டுறவு அதிகாரிகள், காவல் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியும் பலனில்லை.
இதில் பாரதிநகர் பகுதியில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரிசி ஆலை ஊழியர்கள் அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த தகவல் செய்தியாளர் ஒருவர் மூலம் காவல் துறையினருக்கு தெரியவந்ததையறிந்த பாரதிநகர் ஜான்கிறிஸ்டோபர், அஜீத் , விக்னேஷ், பாலு உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் மணிகண்டன் வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மணிகண்டன் மறுத்துவிட 5 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மயக்கமடைந்த மணிகண்டன் கீழே விழ அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர். அப்போது அப்பகுதி மக்கள் குவியத் தொடங்கியதைத் தொடர்ந்து அனைவரும் தப்பியோடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டன், அப்பகுதி மக்களால் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காந்திசந்தை காவல் துறையினர் மணிகண்டன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிந்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.