தஞ்சாவூர் ரயிலடி அருகே விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகத் தனியார் சிறப்பங்காடிக்கு அலுவலர்கள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக நடைமுறையிலுள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. என்றாலும், நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், குறைந்த அளவிலான பணியாளர்களை அனுமதித்தல், குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூர் ரயிலடி அருகே பென்னிங்டன் சாலையிலுள்ள தனியார் சிறப்பங்காடியில் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதிக அளவிலான பணியாளர்களையும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினருக்குப் புகார்கள் வந்தன.
இதன்பேரில் கோட்டாட்சியர் எம் வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோர் தொடர்புடைய சிறப்பங்காடிக்குச் சென்று சோதனையிட்டனர்.
இதில் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தியதும், அதிக அளவில் பணியாட்களை வேலையில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்தச் சிறப்பங்காடிக்கு சீல் வைக்கப்பட்டது.