சென்னை: சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1077 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7117-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரம், திங்கள்கிழமை நிலவரப்படி, 8 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திங்கள்கிழமை (மே 18) 364 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7117-ஆக உயர்ந்துள்ளது.
மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவரப்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1077 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல், 1,622 பேர் குணமடைந்துள்ளனர். 56 பேர் உயிரிழந்துள்ளனர். 5,396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை வரை, 1777 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல், திங்கள்கிழமை வரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்த பயணிகளில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.