அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து: அதிமுக அறிவிப்பு

அதிமுகவில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை: அதிமுகவில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.

ஊராட்சிக் கழக செயலாளர்களாகப் பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்காளப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலமும் ஒரு சில மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதனும், வேலூர் மண்டல செயலாளராக எம். கோவை சத்யனும், கோவை மண்டல  செயலாளராக சிங்கை ஜி. ராமச்சந்திரனும், மதுரை மண்டல செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யனும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com